Archives: ஜூலை 2019

நாம் யார்?

என் வருங்கால மனைவியை என் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்வதற்காக அழைத்துச் சென்றேன். என்னோடு பிறந்த, எனக்கு மூத்தவர்களான இருவர், கண்களில் மிளிர்ச்சியுடன், “இவனிடம் உனக்கு எது பிடித்திருந்தது?” என்று கேட்டார்கள். தனக்குப் பிடித்தளவுக்கு ஒரு நல்ல மனிதனாக தேவனுடைய கிருபையால் நான் வளர்ந்திருப்பதாக சிரித்தவாறே பதிலளித்தாள்.

அது ஒரு புத்திசாலித்தனமான பதில். நம்முடைய கடந்தகாலத்தைக் கடந்து, தேவன் எவ்வாறு நம்மைப் பார்க்கிறார் என்பதை அந்தப் பதில் மிகசரியாகப் பிரதிபலிக்கிறது. தேவனுடைய சபையை உபத்திரவப்படுத்தி வந்த சவுல் கிறிஸ்துவின் பிரசன்னத்தால் குருடாகிறார், அவரைக் குணப்படுத்தும்படி அனனியாவிடம் கிறிஸ்து சொல்கிறார் (அப். 9). அனனியாவுக்கு நம்பமுடியவில்லை, இயேசுவை விசுவாசித்தவர்களை உபத்திரவப்படுத்தி, மரணத்தண்டனைக்கு ஒப்புக்கொடுத்த சவுலையா தான் குணமாக்கவேண்டுமெனக் கேட்கிறார். சவுல் எப்படியிருந்தான் என்று பார்க்காமல், அவன் எப்படி மாறியிருக்கிறான் என்று பார்க்குமாறு அனனியாவிடம் தேவன் சொல்லுகிறார். புறஜாதியார் (யூதர் அல்லாதவர்கள்), ராஜாக்கள் உட்பட (வச. 15) அப்போது அறியப்பட்டிருந்த தேசங்கள் முழுவதிற்கும் நற்செய்தியைக் கொண்டுசெல்கிற சுவிசேஷகனாக மாறியிருந்தார். சவுலை அனனியா ஒரு பரிசேயனாகவும் உபத்திரவக்காரனாகவும் பார்த்தார், ஆனால் தேவன் அவரை அப்போஸ்தலனாகவும் சுவிசேஷகனாகவும் பார்த்தார்.

நான் இருக்கிற நிலை இதுதானே என்று சிலசமயங்களில் நம்மைபற்றி நாம் நினைக்கலாம். நம் தோல்விகளும் குறைகளுமே நம் கண்களுக்குத் தெரியலாம். ஆனால் நம்மைப் புதுச்சிருஷ்டிகளாக தேவன் பார்க்கிறார். நாம் எப்படி இருந்தோம் என்பதை அல்ல, இயேசுவுக்குள் நாம் எப்படி இருக்கிறோம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நாம் எப்படிப்பட்டவர்களாக மாறி வருகிறோம் என்று பார்க்கிறார். தேவனே, இப்படியே நாங்கள் எங்களையும் மற்றவர்களையும் பார்ப்பதற்கு எங்களுக்கு உதவிசெய்யும்!

புதுப்பிக்க ஆயத்தமாக இருக்கிறார்

நான் ஜெர்மனி நாட்டில் இராணுவத்தில் பணிபுரிந்தபோது, புத்தம்புதிய 1969 வோக்ஸ்வேகன் பீட்ல் கார் ஒன்றை வாங்கினேன். அருமையான கார்! அதன் வெளிப்புற அடர் பச்சை நிறத்தையும், உட்புற லெதர் அலங்காரத்தையும் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும். வருடங்கள் உருண்டோடின, வண்டியும் பழசாகியது. அதுபோதாதென்று ஒரு விபத்து வேறு. அதனால் காரின் பக்கவாட்டில் இருக்கும் கால்மிதி பகுதி சேதமடைந்தது. காரின் கதவுகளில் ஒன்று உடைந்துபோனது. “மீண்டும் புதுப்பிப்பதற்கு இந்தக் கார் முற்றிலும் தகுதியானதுதான்” என்று என் கற்பனையில் உதித்திருக்கலாம். அதிக பண செலவில் அதைப் புதுப்பித்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நான் செய்யவில்லை.

ஆனால் தேவனுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். அவர் மிகச்சரியாகப் பார்க்கக்கூடியவர், அளவில்லா வளங்களைப் பெற்றிருப்பவர். வாழ்க்கையில் அடிபட்டு, உடைந்துபோனவர்களை அவர் கைவிடுவதில்லை. மீண்டும் புதுப்பிக்கப்படத் தகுதியானவர்கள் யார் என்பதுபற்றியும் புதுப்பிக்க வல்லவரான தேவனைப்  பற்றியும் சங்கீதம் 85 சொல்லுகிறது. தேவனுக்கு எதிராக கலகம் செய்ததின் விளைவாக இஸ்ரவேலர் நாடு கடத்தப்பட்டார்கள், பிறகு எழுபது வருடங்கள் கழித்து அந்தச் சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்தார்கள், அதை மனதில் வைத்தே இந்தச் சங்கீதம் எழுதப்பட்டிருக்கவேண்டும். தேவன் தங்கள் பாவங்களை மன்னித்து, தங்கள்மேல் தயவுகாட்டியதை எண்ணிப்பார்த்தார்கள் (வச. 1-3). உடனே தேவனிடம் உதவி கேட்கவும் (வச. 4-7), அவரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்க்கவும் (8-13) ஊக்கம் பெற்றார்கள். 

அடிபட்டு, நொந்து, உடைந்துபோகிற அனுபவம் யாருக்குத்தான் உண்டாவதில்லை? இவ்வாறு நேரிடுவதற்கு சிலசமயங்களில் நாமேகூட காரணமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய தேவன் புதுப்பித்தலின் தேவன், பாவமன்னிப்பின் தேவன். தாழ்மையோடு அவரிடம் செல்கிற எவருக்கும் நம்பிக்கை உண்டு. தம்மிடம் வருகிறவர்களை இருகரம் நீட்டி அவர் வரவேற்கிறார்; அவ்வாறு வருகிறவர்கள் அவர்களுடைய கரங்களில் தஞ்சம் புகலாம்.

எல்லாம் எதற்கும் பிரயோஜனமில்லை

ஹெராயின் போதை வஸ்துக்கு அடிமைப்படுவது வருத்தகரமானது, துயர்தரக்கூடியது. ஹெராயினின் அளவுக்கேற்ப உடலும் பழகிவிடுவதால், அதேயளவு போதை கிடைப்பதற்கு ஹெராயினின் அளவை அதிகரிக்கவேண்டிய அவசியம் உண்டாகிவிடுகிறது. ஓரளவுக்கு மேல் அதிகமாக உட்கொள்ளும்போது, அது உயிரைப் பறித்துவிடுகிறது. அளவுக்கதிகமாக ஹெராயின் உட்கொண்டு யாராவது மரித்துவிட்டதாக ஹெராயின் அடிமைகள் கேள்விப்படும்போது, உடனே அவர்களுக்கு பயம் உண்டாவதில்லை; மாறாக “அது எங்கே கிடைக்கிறது?” என்று விசாரிப்பார்கள்.

இந்தக் கீழ்த்தரமான போக்குபற்றி ஸ்குரூடேப் லெட்டர்ஸ் எனும் புத்தகத்தில் சி.எஸ்.லூயிஸ்  எச்சரித்திருக் கிறார். பாவச்சோதனையை சாமர்த்தியமாகக் கொடுப்பது எப்படியென ஒரு பிசாசு விளக்கம் கொடுப்பதுபோல அந்தப் புத்தகத்தில் கற்பனைசெய்து எழுதியிருப்பார். இன்பம் தருகிற ஏதாவது விஷயத்தில் முதலில் ஈடுபட வேண்டும், தேவன் அனுமதித்திருக்கிற நல்ல இன்பங்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தேவன் தடைசெய்திருக்கும் விதத்தில் அதை அனுபவிக்கும்படித் தூண்டவேண்டும். தூண்டுதலுக்கு மனிதன் இணங்கினதுமே, அந்த இன்பம் அவனுக்குக் கிடைக்காமல் செய்து, அதற்காக அவன் அதிகம் ஏங்கும்படி அவனை வசியப்படுத்தவேண்டும். “அந்த இன்பத்தை கொஞ்சம்கொஞ்சமாகக் குறைத்து, அதைப் பெறுவதற்கான ஆசையை அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும். இறுதியில், “அந்த மனிதனின் ஆத்துமாவைச் சிறைப்படுத்தி, அவனுக்கு எதுவுமே கிடைக்காமல் செய்யவேண்டும்” என்று அந்தப் பிசாசு சொல்லுவதாக எழுதியிருப்பார்.

 இந்த நாசகரமான சுழற்சியை பாலின்ப பாவச்சோதனையை வைத்து நீதிமொழிகள் 7 விவரிக்கிறது. பாலுணர்வு என்பது தேவன் தந்திருக்கிற நல்லதொரு ஈவு. ஆனால் பாலுணர்வு நுகர்வை திருமண பந்தத்திற்கு வெளியே அனுபவிக்க முயலும்போது, ‘ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வது’ போலாகும்
(வச. 22). நம்மைவிட பலசாலிகளான மனிதர்கள் எல்லாம் தீங்கான விஷயங்களை அனுபவிக்க முயன்று, தங்களையே அழித்திருக்கிறார்கள். எனவே, “செவிகொடுங்கள்,” “உன் இருதயம் (தவறான) வழியிலே சாயவேண்டாம்” (வச. 24-25). பாவம் நம்மை மயக்கலாம், அடிமைப்படுத்தலாம், ஆனால் எப்படியானாலும் முடிவு மரணம்தான். வசனம் 27. தேவனுடைய பெலத்தால், பாவச்சோதனையை மேற்கொள்ளும்போது, அவருக்குள் மெய்யான சந்தோஷத்தையும் மனதிருப்தியையும் பெற்றுக்கொள்ளலாம்.

தேவனுக்காகப் பிரயாசப்படுதல்

இங்கிலாந்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வில்லியம் கேரி. பின்னாளில் அவர் என்ன சாதிக்கப்போகிறார் என்று அவர் காலத்தில் (1761-1834), அவருடைய கிராமத்தில் வாழ்ந்த யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நவீனக்கால ஊழியப் பணிகளின் தந்தை என்று அவர் இன்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெற்றோர் நெசவு தொழிலாளர்கள். வில்லியம் கேரியும்கூட ஆசிரியராகவும், செருப்புத் தைப்பவராகவும் வேலை செய்தார்; ஆனால் அதில் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. கிரேக்கம், எபிரெயம், லத்தீன் போன்ற மொழிகளைக் கற்றுக் கொண்டார். இந்தியாவில் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்பது அவருடைய கனவு. பல வருடங்களுக்கு பிறகு அந்தக் கனவு நிஜமாகியது. ஆனால் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அவருடைய குழந்தை மரித்துப்போனது, மனைவி மனநோய்க்கு ஆளானார், அவர் யார் மத்தியில் ஊழியம் செய்தாரோ அவர்களிலும்கூட பல வருடங்களாக எந்த மாற்றமுமே காணப்படவில்லை.

ஆனாலும் அவர் முழு வேதாகமத்தையும் ஆறு மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்; வேதாகமத்தின் சில பகுதிகளை இருபத்தொன்பது மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார். பல கஷ்டங்களின் மத்தியிலும் அவரால் எவ்வாறு தொடர்ந்து சேவைபுரிய முடிந்தது? “என்னால் கடுமையாகப் பிரயாசப்படமுடியும். குறிப்பிட்ட இலக்கை அடைய என்னால் விடாமல் முயற்சிசெய்யமுடியும்” என்று அவர் சொன்னார். என்னென்ன சோதனைகள் வந்தாலும் தேவனுக்குச் சேவைசெய்ய தன்னை அர்ப்பணித்திருந்தார்.

இவ்வாறு கிறிஸ்துவுக்கு நம்மை தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டியது அவசியமென எபிரெயருக்கு எழுதும்போது பவுல் ஆலோசனை கூறுகிறார். தேவனைக் கனப்படுத்த விரும்பினால் ‘அசதியாயிராமல்’ (எபி. 6:11) “முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று” தன் வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார் (வச. 12).

தேவன் தன்னுடைய தேவைகளை எல்லாம் சந்தித்து வந்ததாக பின்னான வருடங்களில் வில்லியம் கேரி சொன்னார். “தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை ஒரு நாளும் நிறைவேற்றத் தவறவில்லை; எனவே அவருடைய பணியை நானும் செய்யாமல் இருக்கமுடியாது” என்று சொன்னார். நாமும்கூட ஒவ்வொரு நாளும் தேவனுக்காகச் சேவைசெய்யும்படி அவர் தாமே நம்மைப் பெலப்படுத்துவாராக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம். 

 

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.